Thursday 22 December 2011

நமச்சிவாய வாழ்க!

திருப்பெருந்துறையில் அருளியது

வாழ்த்தும் வணக்கமும்

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள்வாழ்க!
ஆகமம் ஆகிநின்ற அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அனேகன், இறைவன், அடி வாழ்க!
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வாழ்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க!
புறந்தோற்குச் சேயோன் தன் பூங்குழல்கள் வெல்க!
சுரம்-குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெலக!
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெலக!
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீரார் பெருந்துறை நம்தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும்மலை போற்றி

வருபொருள் உரைத்தல்

சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற ஆதனால்,
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்,
சிந்தை மகிழச் சிவபுராணம் - தன்னை,
முந்தை வினை முழுதும் மோய, உரைப்பன் யான்
கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி

அவையடக்கம்

விண் நிறைந்து, மண்ணிறைந்து, மிக்காய், விளங்கொளியாய்,
எண் இறந்து, எல்லை இலாதானே! நின்பெருஞ்சீர்,
பொல்லா வினையேன், புகழுமாறு ஒன்று அறியேன்;

சென்ற நிலைகளும் இன்றைய நிலையும்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய், மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்,
வல்லரசுரராகி, முனிவரய்த் தேவராய்ச்
செல்லா அநின்ற இத்தாவர சங்கமத்துள்,
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்!
மெய்யே, உன் பொன்னடிகள் கண்டு, இன்று வீடுற்றேன்!

பொய்யகல வந்த மெய்ச்சுடர்

உய்ய, என் உள்ளத்துள், ஓங்காரமாய் நின்ற
மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள்
"ஐயா" என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற, நுண்ணியனே!
வெய்யாய்! தனியாய்! இயமானனாம் விமலா!
பொய்யாயின எல்லாம் போயகல, வந்தருளி,
மெய்ஞ்னானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே!

ஐந்தொழில்

ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்துலகும்
ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள்தருவாய்,
போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நிந்தொழும்பின்

சிந்தனையுன் ஊறும் தேன்

நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!
மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!
கறந்தபால், கன்னலொடு, நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று,
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்!

மாய இருள் போக்கிய மாசற்ற சோதி

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்த இருந்தாய், எம் பெருமான்!
வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை,
அறம், பாவம், என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப், புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
விலங்கு மனத்தால், வமலா! உனக்குச்
கலந்த அன்பாகிக், கசிந்து உள்ளுருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி,
நிலம் தன்மேல் வந்தருளி, நீள்கழல்கள் காஅட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே!
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!

ஆட்கொண்ட பெருங்கருணை

தேசனே! தேனார் அமுதே! சிவபுரனே!
பாசமாம் பற்று அறுத்து, பாரிக்கும் ஆரியனே!
நேச அருள்புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே!
ஆரா அமுதே! அளவிலாப் பெரும்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆருயிராய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!
அன்பருக்கு அன்பனே! யாவையுமாய், அல்லையுமாம்
சோதியானே! துன்னிருளே தோன்றாப் பெருமையனே!
ஆதியனே! அந்தம், நடுவாகி, அல்லானே!
ஈர்த்து என்னை, ஆட்கொண்ட எந்தை பெருமானே!
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம்- கருத்தின்
நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண்ணுணர்வே!
போக்கும், வரவும், புவுணர்வும் இலாப் புண்ணியனே!
காக்கும் எம் காவலனே! காண்பரிய பேரொளியே!
ஆற்று இன்ப வெள்ளமே, அத்தா! மிக்காய் நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையக்கத்தின் வெவ்வேறே வந்து, அறிவாம்,
தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே! உடையானே

இதெய்வப் பாடலை பயில்வோரும், பயிலும் திறனும், பயனும்

வேற்று விகார விடக்கு உடம்பின் உட்கிடப்ப
ஆற்றேன், "எம் ஐயா! அரனே ! ஓ !" என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து, பொய்கெட்டு மெய்யானார்,
மீட்டு இங்கு வந்து, வினைப்பிறவி சாரமே,
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லோனே!
நள்ளிருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே!
தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!
அல்லல் பிறவி அறுப்பானே! ஓ! என்று,
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார், சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.



http://www.inbaminge.com/t/devotional/Thiruvasagam%20By%20Illaiyaraja/02%20Pollaa%20Vinayen.vid.html